Trending News

சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட புதியதோர் தேசத்தில் சமாதானமும் சுபீட்சத்துடனும் வாழும் பாக்கியம் எமக்கு கிட்ட வேண்டும் – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – நீதி மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட புதியதோர் தேசத்தில் சமாதானமும் சுபீட்சமும் கிடைக்கப்பெற்ற மக்களாக வாழும் பாக்கியம் எமக்கு கிட்ட வேண்டும் என்று 69ஆவது சுதந்திர தினத்தையிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மனிதர்கள் தமது சுதந்திரத்திற்காக மேற்கொண்ட போராட்டங்களினால் மானுட வரலாறு அழகு பெற்றுள்ளது. இலங்கையரான நாமும் அவ்வாறான பெருமைமிகு சுதந்திரப் போராட்ட வரலாற்றுக்கு உரித்துடையவர்களே.

பல நூற்றாண்டுகளாக நீடித்த மன்னராட்சிக் காலத்திலிருந்து நவீன ஜனநாயகம் வரை நாம் கடந்து வந்த பயணத்தில் அவ்வாறான போராட்டங்கள் பற்றிய இதமான நினைவுகளுடன்இ கசப்பான நினைவுகளும் பதிவாகி இருக்கின்றன.

சுதந்திரத்துக்காக பாடுபட்ட எம் முன்னோர்களினதும் மக்களினதும் தியாகத்துக்கு நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம். உண்மையிலேயே அவர்கள் சிந்திய வியர்வையும் இரத்தமும் சுவாசமும் கலந்த தியாகத்தையே வரலாறு எமக்கு உணர்த்துகின்றது.

69 ஆவது சுதந்திரத்தின விழா நடைபெறும் இவ்வேளையானது எமது நாட்டிற்கு மிகவும் தீர்க்கமான சவால்மிக்கதொரு சந்தர்ப்பமாகும். அண்மைய வரலாற்றில் நாம் அடைந்த ஜனநாயக சுதந்திரத்தைப் பாதுகாத்து தேசிய சிந்தனையின் ஊடாக அனைத்து இனங்களும் சமாதானத்துடன் வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பு எமது தோள் மீது சுமத்தப்பட்டுள்ளது. ஜனநாயகம் சுதந்திரம் போன்ற வார்த்தைகளைக் கொண்டு வர்ணிக்கப்பட்ட இருண்ட யுகத்திலிருந்து நாம் விடுதலை பெற்றுள்ளோம்.

இருளில் மூழ்கிக் கொண்டிருந்த ஜனநாயகத்தையும் மனிதாபிமானத்தையும் மீண்டும் சுடர்விட வைப்பதிலும் நாம் வெற்றி பெற்றுள்ளோம். ஆயினும் சுதந்திரத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்க வேண்டுமாயின் வறுமையிலிருந்தும் நோய்களிலிருந்தும் விடுபடுவது மட்டுமின்றி இன மத சாதி பேதம் போன்ற வரையறைக்குள் சிறைப்பட்டுள்ள மக்களையும் சமூகத்தையும் அவற்றிலிருந்து விடுவித்து மனித உரிமைகள் மற்றும் நீதிநெறிகளை மதிக்கும் தேசத்தை உருவாக்க வேண்டும்.

நீதி மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட புதியதோர் தேசத்தில் சமாதானமும் சுபீட்சமும் கிடைக்கப்பெற்ற மக்களாக வாழும் பாக்கியம் எமக்கு கிட்ட வேண்டும்.

அறியாமையை அறிவினாலும் பொய்மையை வாய்மையினாலும் பழிதீர்க்கும் எண்ணத்தை கருணையினாலும் இம்சையை அகிம்சையினாலும் வெற்றிகொள்ளக் கூடிய மனிதத்தை மதிக்கும் சுதந்திரத்தின் சுவர்ண பூமியாக எமது தாய்நாடு உருவாக வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்

Related posts

ஒரே பிரசவத்தில் பிறந்த 7 குழந்தைகள்..!

Mohamed Dilsad

முஸ்லிம் பெயரில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலால் வேதனையடைந்துள்ளோம்-அமைச்சர் றிஷாத் பதியுதீன்

Mohamed Dilsad

“Bus fares increased from tomorrow” – Minister Ranjith Madduma Bandara

Mohamed Dilsad

Leave a Comment