Trending News

இலங்கை சுனாமிக்கு 14 வருடம் பூர்த்தி-இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை!!

(UTV|COLOMBO)-2004 டிசம்பர் 26 ஆம் திகதி உலக வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு கறுப்பு தினமாக பதிவாகிய ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலை ஆசிய நாடுகளில் வரலாறு காணாத அழிவை ஏற்படுத்தியது.

இலங்கை, இந்தியா, மலேசியா, மியன்மார், அந்தமான், தாய்லாந்து உள்ளிட்ட 14 ஆசிய நாடுகளின் கரையோரங்களை இந்த ஆழிப்பேரலை சூரையாடிச் சென்றது.

ஆசிய நாடுகளில் 2 இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்களை காவுகொண்டது.

அத்துடன், பல்லாயிரக்கணக்கான மக்களை நிர்க்கதியாக்கியது.

கோடிக்கணக்கான சொத்துகள், உடைமைகளையும் சேதமாக்கியது.

இந்த ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தால் 30 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் இலங்கையிலும் காவுகொல்லப்பட்டன.

ஐந்து லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் நிர்க்கதியாகினர்.

அதுமட்டுமன்றி சொத்துகள், உடைமைகளின் சேதத்தால் கல்வி, போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கின.

ஆழிப்பேரலை என்ற சொல்லையும் அதன் தாக்கத்தையும் 2004 ஆம் ஆண்டுவரை அறிந்திருக்காத மக்கள், கடலில் திடீரென ஏற்பட்ட ஆழிப்பேரலையை ஆச்சரியத்துடன் பார்க்கச் சென்றனர்.

இதன் காரணமாகவே பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கடல் கோளுக்கு இறையாகின.

இதன் பின்னர் சுனாமி என்னும் ஆழிப்பேரலை தொடர்பான அச்சமும் அது தொடர்பான விழிப்புணர்வும் உலக மக்களிடம் ஏற்படத் தொடங்கியது.

இன்றைய நிலையில் ஆழிப்பேரலை அனர்த்தத்தை முன்கூட்டியே கண்டறிவதற்காக பல்வேறு உலக நாடுகளில் கண்காணிப்பு மையங்கள் நிறுவப்பட்டு சமுத்திரப்பரப்பும் அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் அவதானிக்கப்பட்டு வருகின்றன.

சுனாமியால் காவுகொல்லப்பட்ட உயிர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26ஆம் திகதி உலக மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

உலக வரலாற்றில் ஒரு கறுப்பு அத்தியாயத்தை எழுதிய ஆழிப்பேரலை ஏற்பட்டு 14 ஆண்டுகள் உருண்டோடியுள்ளபோதும், அது ஏற்படுத்திய வடுக்கள் இன்றும் எம் நெஞ்சைவிட்டு நீங்காமலேயே உள்ளன.

இன்றை தினமும் ஆழிப்பேரலை நினைவுகளை மீட்டும் பல்வேறு நினைவஞ்சலி நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளன.

இந்த நிலையில் ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் நினைவுகளில் சூரியனின் செய்திச் சேவையும் தன்னை இணைத்துக்கொள்கிறது.

ஆழிப்பேரலையினால் உயிரிழந்த அனைத்து மக்களையும் நினைவுகூறும் பொருட்டு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.

இதற்கமைய, இன்று முற்பகல் 9.25 தொடக்கம் 9.27 வரையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், 25 மாவட்டங்களிலும், 25 விழிப்புணர்வு நிகழ்வுகளும், சர்வமத நிகழ்வுகளும் நாளை காலை 9 மணிமுதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

Related posts

பல பெண்களை ஏமாற்றிய ஒருவர் கைது

Mohamed Dilsad

பணியை முடிக்க தவறினால் சிறுநீர் பருக வேண்டும்?

Mohamed Dilsad

UN Officials visit Mullaitivu to obtain information on human rights

Mohamed Dilsad

Leave a Comment